நெஞ்சம் மறப்பதில்லை - ரிலீஸ் செய்ய நடக்கும் பஞ்சாயத்து
செல்வராகவன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா மற்றும் பலர் நடிக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. பல்வேறு காரணங்களால் இப்படத்தின் வெளியீடு கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக முடங்கிப் போயிருந்தது. அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டதாகச் சொல்லி மார்ச் 5ம் தேதி படத்தை வெளியிட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள்.
ஆனால், ஒரு பைனான்சியரிடம் வாங்கிய ரூ.1.24 கோடி பணத்தைத் தர வேண்டிய இருந்ததால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனால், படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இந்த முறை படம் வெளிவந்தால் தான் உண்டு, மீண்டும் தள்ளிப் போனால் அது படத்திற்கே ஆபத்தாக முடியும் என நினைத்து சம்பந்தப்பட்டவர்கள் கடைசி நேர பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகிறார்களாம். எப்படியும் அதை சுமூகமாக முடித்து படத்தை திட்டமிட்டபடி வெளியிட முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
இதற்கிடையே ஸ்னீக் பீக் வீடியோ வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்திவிட்டார்கள். எனவே, இந்த முறை படத்தின் வெளியீடு மிஸ் ஆகக் கூடாது என படக்குழுவினரும் கலக்கத்துடன் உள்ளார்களாம்.