சென்னையில் படப்பிடிப்பைத் தொடருமா விஜய் 65 குழு?
நெல்சன் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்க விஜய்யின் 65வது படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியா நாட்டில் நடந்து வருகிறது. அங்கு படப்பிடிப்புக் குழுவில் இருந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களைத் தனிமைப்படுத்திவிட்டு படப்பிடிப்பைத் தொடர்ந்து வருகிறார்கள்.
அடுத்த சில நாட்களில் அங்கு படப்பிடிப்பு முடியும் எனத் தெரிகிறது. அதற்கடுத்து சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்ட அரங்கில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பை இங்கு தொடர்ந்து நடத்துவார்களா என்பதும் சந்தேகம்தான். மேலும், வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து திரும்பி வருபவர்கள் மீது சுகாதாரத் துறை தனி கவனம் செலுத்தி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இங்கு விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற வாய்ப்பில்லை என்றும், சில வார இடைவெளிக்குப் பிறகுதான் அவர்கள் படப்பிடிப்பைத் தொடர முடியும் என்றும் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.