அரசியல் ‛நோ, ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு : ரஜினி அறிவிப்பு
ADDED : 1549 days ago
வருங்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை. ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுகிறது, முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என ரஜினி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றபடி அவரும் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்னையை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என திடீரென அறிவித்தார். இதனைத்தொடர்ந்து ‛அண்ணாத்த திரைப்படத்தின் சூட்டிங் பணியில் பிசியாக இருந்தார். படப்பிடிப்பை முடித்த ரஜினி, டப்பிங் பணியை ஆரம்பிப்பதற்குள், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பினார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 12) சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னதாக தனது வீட்டில் இருந்து கிளம்பும் போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என சொன்னப்பிறகு என் மக்கள் மன்ற நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்திக்க முடியவில்லை. அண்ணாத்த திரைப்பட சூட்டிங் தாமதமானது, அதன்பிறகு தேர்தல் வந்தது, கோவிட் பரவல் இருந்தது. அதற்கு பிறகு, என்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக நான் அமெரிக்கா சென்று திரும்பியுள்ளேன்.
மக்கள் மன்றத்தை தொடரலாமா?, அதன் பணி என்ன? போன்ற கேள்விகள் மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களுக்கு உள்ளன. அதேப்போல, எதிர்காலத்தில நான் அரசியலுக்கு வருவேனா, இல்லையா போன்ற கேள்விகளும் இருக்கிறது. இது போன்ற பல விஷயங்களை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு சொல்கிறேன் என்றார்.
அரசியல் ‛நோ - ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு
இந்நிலையில் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பிறகு ரஜினி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது : ‛‛ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன, நிலை என்ன என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளதுது. அதை விளக்க வேண்டியது என் கடமை.
நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.
கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க் தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்!!!
இவ்வாறு தெரிவித்துள்ளார்.