உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் சினிமாவின் ஜெய்சங்கராக மாறும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமாவின் ஜெய்சங்கராக மாறும் விஜய்சேதுபதி

வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் படங்களை பொறுத்தவரை விஜய்சேதுபதியின் படங்களுக்கு போட்டி அவரது படங்கள் தான் என்கிற நிலை உருவாகியுள்ளது. முன்பு ஒரு சமயத்தில் நடிகர் ஜெய்சங்கர் நடித்த படங்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ரிலீசாவது வழக்கமாக இருந்தது. அதனாலேயே அவரை வெள்ளிக்கிழமை நாயகன் என்றே அழைத்தார்கள். தற்போது அவரது இடத்திற்கு விஜய்சேதுபதி முன்னேறுகிறாரோ என்கிற எண்ணம் தான் ஏற்படுகிறது..

உண்மைதான்.. வரும் செப்-9ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்துள்ள லாபம் படம் தியேட்டர்களில் வெளியாகிறது என்றால் அதற்கு அடுத்த நாள் செப்-10ஆம் தேதி அவரது இன்னொரு படமான துக்ளக் தர்பார் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேரடியாகவே ரிலீஸாகிறது. அதேபடம் அதற்கு மறுநாள் ஒடிடியில் வெளியாகிறது.

இன்னொரு பக்கம் விஜய்சேதுபதி - டாப்ஸி நடித்துள்ள அனபெல் சேதுபதி படமும் வரும் செப்-19ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. இந்த நிலையில் மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஏற்கனவே நடித்து முடித்துள்ள கடைசி விவசாயி படத்தையும் வரும் செப்டம்பர் மாதமே ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் நடக்கின்றனவாம்.

முதலில் பிரபலமான ஒடிடி தளத்தில் படத்தை வெளியிட முடிவு செய்திருந்தவர்கள், தற்போது முடிவை மாற்றிக்கொண்டு தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். கொரோனா மூன்றாவது அலை பரவலாம் என்கிற முன்னெச்சரிக்கை காரணமாகவே விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்கள் அனைவரும் இப்படி முண்டியடிக்கிறார்கள் என்றே நினைக்க தோன்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !