உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / மழையில் நனைகிறேன்

மழையில் நனைகிறேன்

தயாரிப்பு - ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ்
இயக்கம் - சுரேஷ்குமார்
இசை - விஷ்ணு பிரசாத்
நடிப்பு - அன்சன் பால், ரெபா மோனிகா ஜான்
வெளியான தேதி - 27 டிசம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 28 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

காதல் கதைகளை ரசிப்பதற்கு இந்தக் காலத்தில் ரசிகர்கள் இருக்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ள நிலையில் இப்படியான காதல் கதைகள் அபூர்வமாக வந்து கொண்டுதான் இருக்கின்றன. முன்னணி நடிகர்களின் ஆக்ஷன் கமர்ஷியல் படங்களே வசூலுக்காகத் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் அறிமுகமில்லாத நடிகர்களின் காதல் படங்களை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் ?. 90களில் வந்திருக்க வேண்டிய ஒரு காதல் கதையை இந்தக் காலத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ்குமார்.

டிகிரி கூட முடிக்காமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார் வசதியான கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த அன்சன் பால். அவருக்கு பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ரெபா மோனிகா ஜான் மீது காதல் வருகிறது. தொடர் முயற்சிகளுக்குப் பின் ரெபாவையும் காதலிக்க வைத்துவிடுகிறார் அன்சன். இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள். வாழ்க்கையில் தட்டுத் தடுமாறி முன்னேறுகிறார்கள். ஒரு கட்டத்தில் பெற்றோர் அவர்களது திருமணத்தை ஏற்க எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது. அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இளம் காதல் ஜோடிகளாக அன்சன் பால், ரெபா மோனிகா ஜான் இருவரும் பொருத்தமாகவே நடித்திருக்கிறார்கள். காதல் கதைகளில் அந்த காதல் ஜோடிக்கான 'கெமிஸ்ட்ரி' திரையில் வெளிப்பட வேண்டும். இருவரது நடிப்பிலும் அது சரியாகவே வெளிப்பட்டுள்ளது. பல காதல் கதைகளில் கதாநாயகனை வேலை, வெட்டி இல்லாதவனாகவே காட்ட வேண்டும் என்று எல்லா இயக்குனர்களுக்கும் சபதம் எடுத்திருப்பார்களோ ?.

அன்சன் பெற்றோராக மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், ரெபா அப்பாவாக ராஜா ஆகியோரது கதாபாத்திரங்கள் பெற்றோரின் பாசத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. காதல் கதை என்றால் நண்பன் இல்லாமலா, இந்தப் படத்திலும் அப்படி ஒரு நண்பனாக கிஷோர் ராஜ்குமார் நடித்திருக்கிறார். காதலர்களுக்கு உதவி செய்பவராக வெற்றிவேல் ராஜா மனதில் இடம் பிடிக்கிறார்.

காதல் கதை என்றால் பாடல்கள் இனிமையாக அமைந்தால்தான் படத்திற்கு பிளஸ் பாயின்ட். அதைத் தவறவிட்டாலும் பின்னணி இசையில் சமாளித்துள்ளார் இசையமைப்பாளர் விஷ்ணு பிரசாத்.

காதல் படம் என்றாலே இரு வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் காதலைக் காட்டுவது தமிழ் சினிமாவில் வாடிக்கை. அப்படியான சில க்ளிஷேவான காட்சிகள் படத்தில் உண்டு. இருந்தாலும் கிளைமாக்சில் நாம் சிறிதும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை வைத்து கடைசி நேர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

மழையில் நனைகிறேன் - தூறலில்..



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !