ஹயக்ரீவரை வழிபட குவிந்த மாணவர்கள்
திருப்பூர்: ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பூஜையில், நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில், கல்வி கடவுளாக விளங்கும், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சன்னதி உள்ளது. ஆண்டுதோறும், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர் நலனுக்காக, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அதில், திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று, நடப்பாண்டு, பொதுத்தேர்வில் பங்கேற்கும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற ஹயக்ரீவர் வழிபாடு நடத்தப்பட்டது. ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு யாகம், திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம் சாத்துமறை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில், நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தி, சுவாமியை தரிசனம் செய்தனர். இதேபோல், வரும், 23 மற்றும், மார்ச் 1 தேதி, ஸ்ரீஹயக்ரீவர் பூஜை நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.