காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன்
இடைப்பாடி: இடைப்பாடி தாவாந்தெரு, வெள்ளாண்டிவலசு பகுதிகளில் நடந்த காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்தனர். இடைப்பாடி, தாவாந்தெரு பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச், 1ல் சக்தி கரக ஊர்வலம் நடந்தது. நேற்று நடந்த குண்டம் திருவிழாவில், 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். தீமிதி விழாவில் எலுமிச்சை அலகு குத்தியும், கார்கள், ஆம்னிவேன் போன்ற வாகனங்களை இழுத்து வந்தும், பெண்கள் நாக்கு அலகு குத்தியும், குழந்தைகளுடனும் தீ மிதித்தனர். அதேபோல், இடைப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 25ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று தீ மிதி விழா நடந்தது. வெள்ளாண்டிவலசு, போடிநாயக்கன்பட்டி, மசையந்தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.