உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், மாகாளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. மேட்டுப்பாளையம், பாக்குக்கார தெருவில், பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக நடந்து, 12 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, திருப்பணிகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த, 3 ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. முதல், இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள், கருவறை தெய்வங்களுக்கு, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று காலை நான்காம் கால யாக பூஜை முடிந்தவுடன், யாக சாலையில் இருந்து, தீர்த்த கலசங்கள், நாதஸ்வர இசை, மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி, ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்பு கோபுர கலசத்திற்கும், பரிவார் மூர்த்திகளுக்கும், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தத்தை ஊர்தி கும்பாபிஷேகத்தை நடத்தினர். யாகசாலை பூஜைகளை, ஞானசுவாமிநாத குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !