பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தில் தடுப்பூசி முகாம்
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி, பொது சுகாதாரத்துறை ஆகியவற்றுடன் இணைந்து, சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் சார்பில் இலவச தடுப்பூசி முகாமை நடத்தினர்.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதையடுத்து மத்திய அரசு 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பரமக்குடியில் பல்வேறு பொது நல அமைப்புகள், பள்ளி சார்பில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானம் சார்பில், நேற்று சவுந்தரவல்லி தாயார் இல்லத்தில், காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது. தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி நாகநாதன் தலைமை வகித்தார். இதில் 250க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். டிரஸ்டிகள் பாலமுருகன், நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இது போன்ற ஆன்மீக அமைப்புகள் சார்பில் முகாம் நடத்தப்படுவதால், பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பு ஊசி செலுத்தி கொள்கின்றனர்.