அர்ச்சகர் நியமன விவகாரம் கோவில் பூஜாரிகள் எதிர்ப்பு
 திருப்பூர்-அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கோவில் பூஜாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட கோவில் பூஜாரிகள் சங்க தலைவர் சந்திரன் உள்ளிட்டோர் நேற்று கலெக்டர் அலுவலத்தில் அளித்த மனு:கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கோவில்கள் மூடப்பட்டு, அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் வருமானம் இழந்துள்ளனர்.அரசு அறிவித்த கோவில் பூஜாரிகளுக்கான நிவாரணம் மற்றும் உதவி தொகை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. தனியார் கோவில், ஊர்க் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் பூஜாரிகளுக்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. இட ஒதுக்கீட்டிலும் நாங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளோம். வருமானம் உள்ள கோவில்களை அரசு கையகப்படுத்தி விட்டது. அறநிலைய துறை கோவில் போல் எங்களுக்கும் உரிய சலுகை வழங்க வேண்டும்.அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும். கோவில், பூஜை என்றால் பின்பற்ற வேண்டிய விதிமுறை ஏராளம் உள்ளன. யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆக முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.