உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுள் பெயரில் நன்கொடை வசூல் கூடாது: உயர் நீதிமன்றம்

கடவுள் பெயரில் நன்கொடை வசூல் கூடாது: உயர் நீதிமன்றம்

சென்னை : கடவுள் பெயரில், தனியார் அறக்கட்டளை, தனிநபர்கள் நன்கொடை வசூலிக்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த, வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா, இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. எதிர்காலங்களில் உற்சவங்களை நடத்த, ஜீயர்கள், ஸ்தலத்தார்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என, கூறியிருந்தார்.

இம்மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், சவுரிராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நவ., 10 முதல், 19ம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை; இதில், கோவில் நிர்வாக அதிகாரி தலையீடு எதுவும் இல்லை; நிகழ்ச்சிக்காக, பல சபாக்கள் சார்பில், பணம் வசூலிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடவுள் பெயரில், தனி நபர்கள், தனியார் அறக்கட்டளைகள் நன்கொடை வசூலிக்கக் கூடாது என, நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர். உடனே, தொலைவில் இருந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, நன்கொடை வசூலிப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், பாரம்பரியமாக உள்ள நடைமுறையில் குறுக்கீடு செய்ய மாட்டோம். சட்டவிரோத அம்சங்கள் ஏதேனும் சுட்டிக் காட்டப்பட்டால், நீதிமன்றம் தலையிடும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !