அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்
ADDED :1450 days ago
சென்னை: மணலி புதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் புரட்டாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சென்னை மணலி புதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில், அய்யா எழுந்தருளி வலம் வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.