சதுரகிரியில் மார்கழி அமாவாசை வழிபாடு: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மார்கழி மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு உடல், வெப்ப பரிசோதனைக்கு பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.காலை 10:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால், மதியம் 12:00 மணி வரை 10 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்து திரும்பினர்.கோயிலில் நடந்த அமாவாசை வழிபாட்டில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன் செய்திருந்தனர். சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.