பரமக்குடியில் ராமர் - சீதை திருக்கல்யாணம்
ADDED :1479 days ago
பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்டராமர் சாமி கோயிலில், ராமநவமி விழாவையொட்டி ராமர், சீதை திருக்கல்யாண விழா நடந்தது. இக் கோவிலில் ராமநவமி விழா ஏப்., 2 கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வந்தார்.
ஏப்., 9 அன்று புத்திரகாமேஷ்டி யாகம் நடந்தது. அப்போது குழந்தை வரம் வேண்டிய தம்பதியருக்கு பாயாசம் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏப்., 10 ராமநவமி உற்சவம், தொடர்ந்து நேற்று காலை 10:30 மணிக்கு ராமர் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், தொடர்ந்து ராமர், சீதை திருக்கல்யாணம் நடந்தது. இரவு சுவாமி பட்டணப் பிரவேசம் நடந்தது. இன்று தீர்த்தவாரி உற்சவமும், கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. நாளை காலை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் ஆஞ்சநேயர் திருவீதி உலா நடக்கிறது.