உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயபுரத்தில் குருவார பிரதோஷ சிறப்பு வழிபாடு

சிவாலயபுரத்தில் குருவார பிரதோஷ சிறப்பு வழிபாடு

மதுரை : மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டி  சிவாலயபுரத்தில் எழுந்தருளி,  அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் சித்திரை மாத, தேய்பிறை  குருவார பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு இன்று (28ம் தேதி) நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு, நந்தியம் பெருமாளுக்கும், சங்கரலிங்கம் சுவாமிக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. இன்றைய இறைப் பணியில்  கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த   திரு.சிவ.அ.சுந்தர முருகேசன் - சிவ. S.முருகேஸ்வரி, டாக்டர்.சிவ. S.சிவானந்த், சிவ.S.ரூபாஸ்ரீ குடும்பத்தினர்,  செய்திருந்தனர். பக்தர்கள் கோளாறு பதிகம், நந்தியம் பதிகம் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்தனர்.  நந்தியம் பெருமாளும் சங்கர லிங்கம் சுவாமியும் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.  கோமதி அம்பிகை சமேத சங்கர லிங்கம் சுவாமி பிரதோஷ மூர்த்தி, சிறப்பு அலங்காரத்தில்,  மூன்று முறை கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர். பக்தர்களுக்கு  வெண்பொங்கல், சுண்டல், அபிஷேக பால், பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !