சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சனம் வரும் 27ம் தேதி துவங்குகிறது
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சனம், வரும் 27 ம் தேதி கொடியேற்றத்துடன் நடக்கிறது.சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருகிறது.
இக்கோவிலில் ஆண்டிற்கு 6 மகா அபிேஷகம் நடப்பது வழக்கம்.அதில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாததத்தில் நடக்கும் ஆனி திருமஞ்சன விழா சிறப்பு வாய்ந்தது. இந்த இரண்டு விழாக்களின்போதும், தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை வழிப்படுவர்.இந்தாண்டு ஆனித் திருமஞ்சன விழா, வரும் 27 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து தினசரி காலை மாலையில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. ஜூலை 1ம் தேதி வெள்ளி ரிஷப வாகன தெருவடைச்சான் உற்சவம் நடக்கிறது.உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் உற்சவம் வரும் 5ம் தேதி நடக்கிறது. ஜூலை 6ம் தேதி காலை 3:00 மணி முதல் 6:00 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் அம்பாளுக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, ஆனி திருமஞ்சனம் நடக்கிறது. விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ சன்னதி வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.