உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாஞ்சாலி திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் விமரிசை

வீரபாஞ்சாலி திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் விமரிசை

மதுராந்தகம் : மொறப்பாக்கம் வீரபாஞ்சாலி திரவுபதியம்மன் கோவிலில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, நேற்று விமரிசையாக நடந்தது.மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கத்தில், பிரசித்தி பெற்ற வீரபாஞ்சாலி திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு, அக்னி வசந்த உற்சவம், இம்மாதம் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவையொட்டி, 24 நாட்களாக தினமும் மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.கடந்த, 15ம் தேதி முதல் தினமும் இரவு 9:00 மணிக்கு, ஜலக்கிரிடை, சுமத்திரை திருமணம், பகடை ஆடுதல், துகில் உரித்தல், அபிமன்யூ சண்டை, அர்ஜுனன் தபசு, கர்ணன் போர் என, மகாபாரத தெருக்கூத்து நாடகம் நடந்தது.நேற்று காலை 10:00 மணிக்கு அரவான் களபலி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.

திரவுபதி அம்மனுக்கு, துரியோதனின் கூந்தல் முடித்து, பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது.மாலை 4:00 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது. 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, பூங்கரகத்தை அலங்கரித்த பக்தர்கள், ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.இன்று, பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !