உலகம்பட்டி உலகநாதர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம்
ADDED :1387 days ago
சிங்கம்புணரி: ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதமும், உச்சி காலம் சித்திரை மாதமாகவும், மாலைப்பொழுது ஆனி மாதமாகவும், இரவு பொழுது ஆவணியாகவும், அர்த்தசாமம் புரட்டாசி மாதமாகவும் இருக்கும். இதில் ஆனி மற்றும் மார்கழி மாதங்கள் இறைவனை வணங்குவதற்கு ஏற்ற மாதங்களாக கருதப்படுகின்றன. ஆண்டுதோறும் ஆனி மாத உத்திரம் நட்சத்திரத்தன்று உற்சவர் ஆடலரசன் நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அவ்வகையில் சிங்கம்புணரி அருகே உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம் இன்று நடந்தது. காலை 9:00 மணிக்கு உற்சவமூர்த்தியான நடராஜர் சமேத சிவகாமி அம்மன் மற்றும் மாணிக்கவாசகருக்கு 18 வகையான அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் சிவகாமி அம்பாள் மாணிக்கவாசகர் அருள்பாலித்தனர்.