உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தியநாத சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை வழிபாடு

வைத்தியநாத சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை வழிபாடு

மயிலாடுதுறை:  வைத்தீஸ்வரன் கோவிலில் ஆடி  கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த  வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள்  உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற  இக்கோயிலில் செல்வமுத்துக் குமாரசாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர் .இக்கோயிலில் ஆடி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. முன்னதாக கிருத்திகை மண்டபம் எழுந்தருளிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு பால், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் முதலான 51 வகை நறுமண திரவியப் பொருட்களைக்  கொண்டு  சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகார்ச்சனை நடைபெற்று  மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த ஸ்வாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து  பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆயிர கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !