நவராத்திரி விழா : ராமேஸ்வரம் கோயிலில் ஸ்ரீசக்கரம் பூஜை
ராமேஸ்வரம்: நவராத்திரி விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஸ்ரீ சக்கரம் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.
செப்., 25ல் ராமேஸ்வரம் திருக்கோயிலில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்பு கட்டி நவராத்திரி விழா துவங்கியது. முதல் நாள் விழாவான நேற்று கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி அருகில் ஸ்ரீ சக்கர சுவாமிக்கு கோயில் குருக்கள் உதயகுமார், சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து மகாதீபாரதனை செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு பசி தீர்க்கும் அன்னபூரணி அலங்காரத்தில் பர்வதவர்த்தினி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைதொடர்ந்து நடந்த மகா தீபாராதனையில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 2ம் நாள் விழாவான இன்று (செப்., 27) இரவு மகாலட்சுமி அலங்காரத்தில் பர்வதவர்த்தினி அம்மன் காட்சியளிக்க உள்ளார்.