உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பக்தர்கள் குபேர கிரிவலம் சென்று வழிபாடு

திருவண்ணாமலையில் பக்தர்கள் குபேர கிரிவலம் சென்று வழிபாடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஏராளமான பக்தர்கள் குபேர கிரிவலம் சென்று, குபேர லிங்கத்தை தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலையில், பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற விசேஷ நாட்களில் கிரிவலம் சென்று, லட்சக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரரை வழிபடுகின்றனர். இதில்,  கார்த்திகை மாதம், தேய்பிறை பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இணைந்து வரும் நாளில், குபேர பெருமான், திருவண்ணாமலையில்  கிரிவலம் செல்வதாக, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அன்று கிரிவலம் சென்றால், குபேர பெருமான் ஆசி கிடைத்து, செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன்படி பிரதோஷம் மற்றும் சிவராத்திரியும் இணைந்து வந்த நாளான  நேற்று மாலை,  பக்தர்கள்  கிரிவலப்பாதையில், ஏழாவதாக உள்ள  குபேர லிங்கத்திற்கு, மாலை, 4:30 மணி முதல்,  6:00 மணி வரை பிரதோஷ காலத்தில்,   சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டு ஏராளமான பக்தர்கள்  கிரிவலம் சென்றனர். இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலப்பாதை முழுவதும் தீபம் ஏற்றியும், பெண்கள் வீடுகளுக்கு முன்பு, தீபமேற்றியும் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !