அவதி: ஐயப்ப பக்தர்கள் குமுளியில் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம்
கூடலுார்: குமுளியில் இரவு நேரத்தில் சிறப்பு பஸ்கள் வசதியின்றி தரிசனம் முடிந்து திரும்பும் ஐயப்ப பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த ஆண்டு சபரிமலைக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளை தொடர்ந்து வராமல் இருந்தால் பக்தர்கள் இந்த ஆண்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகம் வருகின்றனர். தற்போது மண்டல பூஜை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். தரிசனம் முடிந்து திரும்பும் ஐயப்ப பக்தர்கள் குமுளியில் இரவு நேர பஸ் வசதியின்றி பல மணி நேரம் காத்திருந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த ஒரு மழையால் ஒதுங்கி நிற்க கூட இடமின்றி புலம்பினர். ஐயப்ப பக்தர்கள் அதிகரித்துள்ள நிலையில் குமுளியிலிருந்து தமிழகப் பகுதிக்கு செல்வதற்கு சிறப்பு பஸ்கள் இதுவரை இயக்கப்படவில்லை. மேலும் பஸ் ஸ்டாப்பிற்கு முன்பு மழையில் நனையாமல் இருக்க பக்தர்களுக்காக நிழற்குடையும் அமைக்கவில்லை. பக்தர்கள் வருகை அதிகரிப்பதால் இனிமேலாவது சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் முன்வர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.