தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் மேல்மலையனுாரில் குவிந்தனர் பக்தர்கள்
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு 11 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர தீபமேற்றி சரண கோஷத்துடன் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நடந்த ஊஞ்சல் தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் பக்திபாடல்களையும், அம்மன் தாலாட்டு பாடல்களையும் பாடினர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். தை மாத அமாவாசை என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தினால் மேல்மலையனூர் கோவில் அருகே செல்ல முடியாதபடி முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் விழுப்புரம் கலெக்டர் மோகன் கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் தலைமையில் 350க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், கடலுார் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கினர்.