உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க பிரதிஷ்டை விழா; தனுஷ்கோடியில் விபீஷ்னருக்கு பட்டாபிஷேகம்

ராமலிங்க பிரதிஷ்டை விழா; தனுஷ்கோடியில் விபீஷ்னருக்கு பட்டாபிஷேகம்

ராமேஸ்வரம்: ராமலிங்க பிரதிஷ்டை விழா யொட்டி தனுஷ்கோடி அருகே கோதண்ட ராமர் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் விழா நடந்தது.

ராமநாதசுவாமி கோயிலில் மே 27 முதல் ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்கியது. 2ம் நாள் விழாவான நேற்று காலை 6:40 மணிக்கு கோயில் இருந்து ஸ்ரீ ராமர், சீதை, லெட்சுமணர், அனுமான் பல்லாக்கில் புறப்பாடாகினர். பின் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீ ராமர் எழுந்தருளினார். பின் ராமாயணம் வரலாற்றை நினைவு கூறும் விதமாக கோயில் குருக்கள் சிரஞ்சீவி கூறியதாவது : சீதையை விடுவிக்கும்படி இலங்கை மன்னர் ராவணனிடம் தம்பி விபீஷணர் கூறினார். இதனை கேட்காத ராவணன், விபீஷணனரை அவமரியாதை செய்தார். உடனே விபீஷணர் அங்கிருந்து வான் வழியாக புறப்பட்டு தனுஷ்கோடி வந்திறங்கினார். அங்கு சீதையை மீட்க ராமர், லட்சுமணர், அனுமான், வானர சேனைகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ராவணனின் ஒற்றனாக விபீஷணர் வருவதாக கூறி அனுமான் கோபமடைந்தார். உடனே ராமர் அடைக்கலம் தேடி வருவோருக்கு பாதுகாப்பு கொடுப்பது தர்மம் எனக் கூறி நடந்ததை கேட்டறிந்தார். பின் லட்சுமணரிடம் கடல்நீரை எடுத்து வரும்படி கூறிய ராமர், இலங்கை மன்னராக விபீஷணரை அறிவித்து பட்டாபிஷேகம் சூட்டினார் என தெரிவித்தார். இதனையடுத்து கோயில் குருக்கள், விபீஷணருக்கு தலைப்பாகை அணிவித்து பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. பின் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !