திருப்பரங்குன்றத்தில் நாளை விசாக பால்குட திருவிழா
ADDED :1005 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா நாளை (ஜூலை 2) நடக்கிறது. கோயிலில் மே 24ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கிய வைகாசி விசாக திருவிழாவில் தினம் இரவு ஏழு மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி வசந்த உற்சவம் நடக்கிறது. இந்நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. நாளை காலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை சமேத சண்முகர், மூலவர் கரத்திலுள்ள தங்க வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து சண்முகர், வள்ளி, தெய்வானை விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர். காலை 6:00 மணி முதல் பக்தர்கள் கொண்டு வரும் பால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.