சோமனூர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; கால பூஜைகள் துவக்கம்
சோமனூர்: சோமனூர் பவர் ஹவுஸ் கார்னரில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கால பூஜைகள் துவங்கியது.
சோமனூர் பவர் ஹவுஸ் கார்னரில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் பழமையானது. இங்கு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. நேற்று மாலை, 3:00 மணிக்கு, சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில், பெண்கள் தீர்த்தக் குடங்கள், முளைப்பாரிகளை ஏந்தி வந்தனர். முன்னதாக, கடவுள் திருவுருவ வேடம் அணிந்தவர்கள் ஊர்வலமாக வந்தனர். இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. நான்கு கால பூஜைகள் முடிந்து, செப்., 3 ம்தேதி காலை, 9:30 மணிக்கு செல்வ விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.