மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்கத்தகடு பதித்த கொடி மரம்!
ADDED :4744 days ago
சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், புதிய தங்க தகடுகள் பதித்த கொடி மரத்தை அமைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மதுரை, மீனாட்சி அம்மன் கோவில், அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன், நேற்று காலை முதல்வர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது, மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பழமை வாய்ந்த கொடி மரத்திற்குப் பதில், புதிய கொடி மரம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருவதாக முதல்வரிடம் தெரிவித்தார். மேலும், கோவிலில் இருப்பில் உள்ள, 16 கிலோ தங்கத்தை பயன்படுத்தி, புதிய கொடி மரம் அமைக்க, முதல்வரிடம் அனுமதி கேட்டார். இதை பரிசீலித்த முதல்வர், புதியதாக தங்கத் தகடுகள் பதித்த கொடி மரத்தை அமைக்க உத்தரவிட்டார்.