உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணத்தில் மாசி மக விழா: மகாமக குளக்கரையில் தீர்த்தவாரி.. குவிந்த பக்தர்கள்

கும்பகோணத்தில் மாசி மக விழா: மகாமக குளக்கரையில் தீர்த்தவாரி.. குவிந்த பக்தர்கள்

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மகா மகம் தொடர்புடைய 12 சிவன் கோவில்களில் ஆண்டுதோறும் மாசி மக விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இவ்விழாவையொட்டி, கும்பகோணம் காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், கெளதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோவில்களில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கியது. இக்கோவில்களில் தொடர்ந்து பிப்ரவரி 22ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, வீதி உலா நடைபெற்றது. இதேபோல, நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோவில்களில் மாசி மக விழா ஏக தின உற்சவமாக  நடைபெற்றது.  முக்கிய வைபவமான மாசி மக தீர்த்தவாரி மகா மகக் குளக்கரையில் இன்று காலை  நடைபெற்றது. இதில், 10 கோவில்களிலிருந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமிகள் எழுந்தருளி, பிற்பகல் 12.30 மணியளவில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதாலும், கம்பட்ட விஸ்வநாதர் கோவிலில் கொடி மரம் திருப்பணிக்கான பாலாலயமும் செய்யப்பட்டுள்ளதால், நிகழாண்டு மாசி மக விழா நடைபெறவில்லை. வைணவத் தலங்களான சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய கோவில்களில் மாசி மக விழா கொடியேற்றத்துடன் பிப்ரவரி 16ம் தேதி தொடங்கி, தொடர்ந்து உற்சவங்கள் நடைபெற்று வந்தன. மாசி மகத்தையொட்டி,  சக்கரபாணி கோவில் திருத்தேரோட்டமும், பொற்றாமரை குளத்தில் சாரங்கபாணி கோவில் தெற்ப உற்சவமும், ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப் பெருமாள் கோவில்களில் சப்பரமும் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !