பஞ்சவடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை; ஆனந்த முனிவருக்கு சிவபெருமான் ஸ்ரீமுக நடராஜராக எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டிய ஆனந்த தாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆனந்த தாண்டவபுரத்தில் பழமை வாய்ந்த பஞ்சவடிஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 63 நாயன்மார்களின் மானகஞ்சாற நாயனார் அவதாரம் செய்து இறைவன் திருவிளையாடல் நடத்திய ஸ்தலமாகும். மேலும் ஆனந்த முனிவருக்கு இறைவன் ஸ்ரீமுக தாண்டவம் ஆடி காட்டிய தலமாதலால் இவ்வூர் ஆனந்த தாண்டவபுரம் என்ற பெயர் பெற்றது. பழமை வாய்ந்த இந்த கோயிலின் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு 6 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன . இதற்காக 52 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு நவக்கினி ஹோமம் நடைபெற்றது. 108 வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. ஆறு கால யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மகா பூர்ணாகுதிக்கு பிறகு மங்கள வாத்தியங்கள் முழங்க எடுத்து வரப்பட்டு சுவாமி அம்பாள் சன்னதி கோபுரங்கள் ராஜகோபுரம் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் கலசபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.