ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் 1007வது திரு நட்சத்திர மகோத்சவ விழா; நாளை தேரோட்டம்
ஸ்ரீபெரும்புதுாரில், 1,017ம் ஆண்டு, ராமானுஜர், சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ஆந்திர மாநிலம் திருப்பதி, கர்நாடக மாநிலம் மேலக்கோட்டைதிருநாராயணபுரம் ஆகிய பல திவ்ய தேசங்களில் வாழ்ந்து, ஆன்மிக பணிகளிலும் சமய சீர்திருத்த பணிகளையும், வைணவத்தை தழைத்தோங்கச் செய்ய, விசிஷ்டாத்வைதம் என்ற உயரிய கோட்பாட்டையும் வகுத்து தந்தார்.பல கோவில் கோட்பாடுகளையும், பூஜை முறைகளையும் வகுத்து தந்தார். சிறந்த மகானாகவும், தலைச்சிறந்த வைணவ ஆச்சாரியராகவும் திகழ்ந்தார். இத்தகைய சிறப்பு மிக்க ராமானுஜரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, சித்திரை மாதம் பிரம்மோற்சவ உற்சவம், ஏப்., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் 10 நாட்கள் ஆதிகேசவப் பெருமாள் பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேர் விழா ஏப்., 29ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து, ராமானுஜரின் 1007வது அவதார உற்சவம், மே 3ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமீ பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். தொடர்ந்து, நாளை மே 11ம் தேதி, ராமானுஜர் திருத்தேர் விழா நடக்க உள்ளது.