பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் வருஷாபிஷேகம் கோலாகலம்
பெரியகுளம்; பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ஆறாம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது. ஹிந்து அறநிலை துறைக்கு உட்பட்டது. இங்கு பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு தனித்தனியாக கொடிமரம் உள்ளது விசேஷமானது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மிகப் பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். நேற்று ஆறாம் ஆண்டு வருஷாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கும்பகலச பூஜையை, அர்ச்சகர் கார்த்திக் தலைமையில் அர்ச்சகர்கள் செய்தனர். கலசத்தில் இருந்த தீர்த்தத்தினை பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு ஊற்றியும், பல்வேறு திரவியம் பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர்கள் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணிகுழுவினர் சசிதரன், சிதம்பர சூரியவேலு, பா.ஜ., வர்த்தக அணி தலைவர் கோபி கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.