நெமிலிச்சேரி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
செங்கல்பட்டு; பல்லாவரம் வட்டம், நெமிலிச்சேரி அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நெமிலி என்றால் தெலுங்கில் மயில் என்று அர்த்தம். செருவு என்றால் கூட்டம். முற்காலத்தில் இப்பகுதியில் மயில்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததால் இத்தலம் நெமிலிச்சேரி எனப் பெயர் பெற்றதாம். இங்குள்ள அம்மன் ஆனந்தவல்லி தெற்கு நோக்கியவளாக அபயஹஸ்த முத்திரை காட்டி அருள்பாலிக்கின்றாள். கருவறையில் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி சதுர வடிவிலான ஆவுடையார்மீது வீற்றிருந்து அருள்கிறார். நோயால் அவதிப்படுவோர் இவரை வணங்கினால் ஆரோக்கியம் நிச்சயம் கிட்டும் என்கிறார்கள். இத்தகைய சிறப்பு மிக்க இக்கோயிலில் இன்று புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. விழாவில் காஞ்சிபுரம் துணை ஆணையர்/ நகை சரிபார்ப்பு அலுவலர் (கூட.பொ) மற்றும் குழுவினர், திருக்கோயில் செயல் அலுவலர், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.