ஞானத்தின் உச்சம் ஆண்டிக்கோலம் பழனி மாநாட்டில் குன்றக்குடி அடிகளார் பேச்சு
பழனி; ‘‘துறவு தான் ஞானத்தின் உச்சம். அது தான் ஆண்டிக்கோலம்,’’ என, குன்றக்குடி அடிகளார் பேசினார்.
பழனியில் நடக்கும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் அவர் பேசியதாவது: அளவற்ற பெருமைகள் உடைய பழனியில் முத்தமிழ் மாநாடு நடக்கிறது. பழனியில் இருக்கும் முருகன் ஆண்டிக்கோலத்தில் இருக்கிறார். துறவு தான் ஞானத்தின் உச்சம். அதைத்தான் முருகன் எடுத்துரைக்கிறார். எங்கெல்லாம் முருகன் குடி இருக்கிறாரோ, அங்கெல்லாம் மக்களின் குறைகள் தீரும்; நோய்கள் தீரும்; பிணிகள் அகலும். கடவுளை நான் ஏற்றுக் கொள்கிறேனோ, இல்லையோ; கடவுள் ஏற்றுக் கொள்ளும் வகையில் நான் நடந்து கொள்கிறேனா, இல்லையா என்பது தான் முக்கியம்.
மாநாட்டின் மணிமகுடமாக முதல்வர் ஸ்டாலின் உரை இருந்தது. அன்பால் உயிர்கள் ஒன்றாகும்; அறத்தால் உலகம் நன்றாகும். இதுதான் இந்த மாநாட்டின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தருமபுர ஆதீனம் பேசியதாவது: காசி, அறுபடை வீடுகள் போன்ற தலங்களுக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை அரசு செய்து வருகிறது. மலேஷியா, சிங்கப்பூர், மொரீசியஸ் என, பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த மாநாட்டிற்கு வந்துள்ளனர். சங்க இலக்கியங்கள் துவங்கி ஆதீனங்கள் வரைக்கும், பக்தி இலக்கியங்களில் முருகன் புகழ் தான் அதிகமாக பாடப்பட்டிருக்கின்றன. உலக நாடுகள் முழுதும் பரவி இருக்கிற தமிழர்கள் வழிபடும் கடவுளாக முருகன் இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை ஆதீனம் பேசியதாவது: இந்த மாநாடு வாயிலாக இரு கோரிக்கைகள் வைக்கிறேன். சங்கரன் கோவிலில் மாவீரன் புலித்தேவன் சிலையை நிறுவ அரசு அனுமதிக்க வேண்டும். கோவில் நிலங்களுக்கு குத்தகை யாரும் கொடுப்பதில்லை. கோவில் நிலங்களை பலர் வைத்துள்ளனர். மேலும், கோவில் நிலங்களை மீட்க பாடுபட வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் மதுரை ஆதீனம் பேசும் போது, ‘‘என்னையும், அமைச்சர் சேகர்பாபுவையும் ‘டிவி’காரர்கள் தான் எதிரிகள் ஆக்கி விட்டனர். ஆனால், நாங்கள் நண்பர்கள் தான்,’’ என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். இதனால், நிகழ்ச்சி அரங்கத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.