திருப்பரங்குன்றம் கோயிலில் செயலற்ற தானியங்கி மஞ்சள்பை விற்பனை இயந்திரம்
ADDED :586 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குவரும் பக்தர்கள் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டை தவிர்த்து, மஞ்சள் பைகளை பயன்படுத்தும் வகையில் கோயில் ஆஸ்தான மண்டபத்தில் தானியங்கி மஞ்சள் பை விற்பனை இயந்திரம் மார்ச் மாதம் வைக்கப்பட்டது. அதில் 10 ரூபாய் நாணயம் போட்டால் தானாக மஞ்சள் பை வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரம் வைக்கப்பட்டு பல நாட்களுக்குபின்பு பயன்பாட்டிற்கு வந்தது. சில நாட்களாக அந்த இயந்திரம் செயல்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது. கோயில் உள்துறைக்கு இரண்டு கண்காணிப்பாளர்கள் உள்ளனர். இந்த மஞ்சள்பை விற்பனை இயந்திரம் செயல்பாடு இன்றி இருப்பது அவர்கள் கண்ணிலும் படாதது ஆச்சர்யமாக உள்ளது. அந்த இயந்திரத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.