திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
மயிலாடுதுறை; திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருநாங்கூரில் 108 திவ்ய தேசங்களும் ஒன்றான வண்புருஷோத்தமன் கோவில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இந்த ஸ்தலத்தில் வியாக்ரபாதர் மகன் உபமணியும் தாய்ப்பால் நினைத்து அழ பெருமாள் திருப்பாற்கடலை உண்டு பண்ணி பாலமுது ஊட்டியதாக ஐதீகம். இங்கு வந்து பெருமாளை தரிசிப்பவர்களுக்கு பசிப்பிணி நீங்கும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க வண்புருஷோத்தமன் கோவிலில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கோவிலில் காலை 9 மணிக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு அந்த புனித நீரை கொண்டு பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பெருமாள் கொடி மரத்தின் அருகே எழுந்தருள கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு சரியாக 10:20 மணிக்கு கருட கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பெருமாள் மற்றும் கொடி மரத்திற்கு மகா தீப ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ கொடியேற்றத்திற்கான பூஜைகளை வேதராஜன் செய்து வைத்தார். பிரமோற்சவத்தை முன்னிட்டு நாள்தோறும் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், வீதி உலாவும் நடக்கும். 25ம் தேதி காலை திருத்தேர் உற்சவம், பெருமாள் திருப்பாற்கடலில் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை வண்புருஷோத்தமன் கோவில் வகையற 7 கோவில் தேவஸ்தான பரம்பரை ஆதீன தர்மகர்த்தர்கள் ரங்கநாதன், கண்ணன், சீனிவாசன் ஆகியோர் செய்துள்ளனர்.