வரப்பு வெட்டும் போது நிலத்தில் 2 அடி உயர ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு
ADDED :119 days ago
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அருகே நிலத்தில் 2 அடி உயர ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த சோழதரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,40; விவசாயி. இவர், அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் நேற்று மதியம் 3:00 மணிக்கு வரப்பு வெட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது, மண்ணில் 2 அடி உயர ஐம்பொன்னாலான அம்மன் சிலை புதைந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து அவர் தாசில்தார் இளஞ்சூரியனுக்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் உத்தரவின்படி வி.ஏ.ஓ., சாவித்திரி சம்பவ இடத்திற்கு சென்று அம்மன் சிலையை கைப்பற்றி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தார். கண்டெடுக்கப்பட்ட சிலை குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.