பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு
பண்ருட்டி: பண்ருட்டி அருகே, 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர்கால மூத்ததேவி கல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி வயல் பகுதியில் புதர்களுக்கு மத்தியில் ஒரு கல் சிற்பம் மண்ணில் பாதி புதையுண்ட நிலையில் இருந்தது. அப்பகுதியை சேர்ந்த சக்தி என்பவர் கொடுத்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், அங்கு வந்து சிற்பத்தை ஆய்வு செய்தார். அப்போது, 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்திய மூத்ததேவி சிற்பம் என தெரியவந்தது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறுகையில், இச்சிற்பம் 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தியது. பலகை கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மூத்ததேவியின் தலையில் கரண்ட மகுடம், காதில் மகர குண்டலம், கழுத்தில் சரப்பணி என்ற கழுத்தணி். வலது கரத்தில் அவரது மகன் மாந்தன் ரிஷப முகத்துடனும், இடது புறத்தில் மகள் மாந்தினியும் உள்ளனர். மூத்ததேவியின் சின்னமான காக்கையும், துடப்பமும் , சிற்பத்தில் சிதைந்த நிலையில் உள்ளது.
கிராமங்களில் ஏரிக்கரை, வயல் வெளி, ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றில் நீர்நிலைகளை பாதுகாக்கும் தெய்வமாக மூத்ததேவியின் சிற்பத்தை அமைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். லட்சுமிக்கு முன்பு தோன்றியவள் என்பதால் மூத்ததேவி என்றும் மூத்தாள் என்றும் குறிப்பிடுகின்றனர். இப்பெயரே பிற்காலத்தில் மருவி, ‘மூதேவி’ என்றாயிற்று. ஜேஷ்டா தேவி என்பது வடமொழிச் சொல். ஜேஷ்டா என்றால் முதல் என்று பொருள். மேலும் பழையோள், காக்கை கொடியோள் என்றும் மூத்ததேவியை அழைக்கின்றனர். காகத்தை கொடியாகவும், கழுதையை வாகனமாகவும், துடைப்பத்தை ஆயுதமாகவும் கொண்டவள். 15ம் நூற்றாண்டு வரை மூத்ததேவி வழிபாடு மக்களிடம் இருந்தது. பின் காலப்போக்கில் மறைந்துவிட்டது என, தெரிவித்தார்.