வீரமாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
அன்னூர்; எல்லப்பாளையம், வீரமாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
எல்லப்பாளையத்தில், வீரமாச்சி அம்மன் கோவிலில், நந்திக்கு புதிதாக கற்கோவில் அமைத்து திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த 31ம் தேதி துவங்கியது. விநாயகர் வேள்வி பூஜையும், கோவிலில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. கடந்த 3ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலையில் தெய்வத்திருமேனிகளை பீடத்தில் வைத்து, எண் வகை மருந்து சாற்றுதலும் நடந்தது. நேற்று காலை 9:45 மணிக்கு வீரமாச்சி அம்மன் மற்றும் விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், தச தரிசனம், அலங்கார பூஜை நடந்தது. இதையடுத்து பஜனை நடந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பழனி சாது சண்முக அடிகள் ஆகியோர் அருளுரை வழங்கினர். காலை முதல் மதியம் வரை அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை (6ம் தேதி) மாலை 6:00 மணிக்கு வள்ளி முருகன் கலைக்குழுவின் திருக்குறள் வள்ளி கும்மியாட்டம் நடக்கிறது.