நத்தம் அய்யாபட்டி காளியம்மன் கருப்புசாமி கோயில் கும்பாபிஷேக விழா
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த அக்டோபர் மாதம் 27ந் தேதி காலை காப்புக் கட்டுதல், முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது . நேற்று காலை யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து முதற்கால யாக பூஜையும், இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை நடந்ததை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம், கரந்தமலை, அழகர்மலை போன்ற புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டிருந்த தீர்த்தக்குடங்கள் மேளதாளம் முழங்க யாகசாலையிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலைச் சுற்றி வந்து கலசத்தின் உச்சியைச் சென்றடைந்தது. அங்கு சிவாச்சாரியார்கள்வேத மந்திரங்கள் ஓத புனித நீர் கலகத்தில் ஊற்றப்பட்டது. அப்போது கோயிலை சுற்றி நின்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பூஜை மலர்களும், புனித நீரும் பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் அன்னதானம் நடந்தது. இதில் நத்தம், காந்திநகர், மெய்யம்பட்டி, சீரங்கம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ந.அய்யாபட்டி இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.