திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு விழா: தேரோட்டம் கோலாகலம்
தஞ்சாவூர், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரத்தில் ராகுதலமாக போற்றப்படும் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் நாககன்னி, நாகவள்ளி ஆகிய தேவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். ராகு காலத்தில் ராகுபகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.இக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினமும் சுவாமி வீதிவுலா நடைபெறுகிறது. தொடர்ந்து, ஓலைச்சப்பரமும், திருக்கல்யாணமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான கடை ஞாயிறு தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனால், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளினார். மங்கள வாத்தியம், அதிர்வேட்டுகள் முழங்க ஏராளமான பக்தர்களால், தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நான்கு வீதிகளிலும் வலம் வந்து, தேர் நிலைக்கு வந்தடைந்தது.விழாவின் நிறைவு நாளான நாளை கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது.