பக்தர்களின் கஷ்டம் தீர்க்கும் சக்கர சவுடேஸ்வரி அம்மன்
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் அருகே நாகேரஹள்ளி கிராமத்தில் உள்ளது, சக்கர சவுடேஸ்வரி அம்மன் கோவில். சவுடேஸ்வரி தாய்க்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோவில், 300 ஆண்டுகள் பழமையானது.
கோவிலில் முனேஸ்வரா, மாரியம்மா சாமிகளுக்கும் தனியாக சிலைகள் உள்ளன. தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், மற்றவர்களால் ஏவி விடப்படும் பில்லி, சூனியம், மாந்தீரிகத்தை நீக்கவும், உடல் ஆரோக்கியத்துடன் வாழ அம்மனை தரிசிக்கவும், இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. ஹொஸ்கோட், மாலுார், கோலார், கே.ஆர்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் ஓசூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னையை நீக்கவும், திருமண தடை, குழந்தை பாக்யம் கிடைக்கவும், சவுடேஸ்வரி அம்மன் அருள்பாலிப்பதாக பக்தர்கள் மனம் உருகி சொல்கின்றனர்.
தங்கள் மனதில் நினைத்தது நடந்தால், ஆடு, கோழிகளை கோவிலுக்கு கொண்டு வந்து, நேர்த்தி கடன் செலுத்தியும் செல்கின்றனர்.
கண் திருஷ்டியை கழிக்க, சிவப்பு மிளகாயை உடலில் சுற்றி போட தீயில் போட, கோவில் முன் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. தற்போது கோவிலின் நிர்வாகியாகவும், தலைமை அர்ச்சகராகவும் விஜய் கவுடா உள்ளார். அவரது தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா காலத்தில் இருந்தே இந்த கோவில் உள்ளது.
கோவிலை பற்றி மேலும் தகவலுக்கு தொடர்புக்கு: 97383 17945