நல்லுாரில் பகவான் சத்ய ஸ்ரீசாய்பாபா மஹோத்சவ தின ஆராதனை
திருப்பூர்: பகவான் சத்ய ஸ்ரீசாய்பாபாவின் மஹோத்சவ ஆராதனை தினத்தை முன்னிட்டு, நல்லுாரில் பக்தி மணம் கமழும் பல்லக்கு சேவை மற்றும் நாராயண சேவை சிறப்பாக நடந்தது.
நல்லுாரில் உள்ள பகவான் சத்ய ஸ்ரீசாய்பாபா பஜனா மண்டலி சார்பில் இந்த ஆராதனை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கிய நிகழ்வாக, மலர்களால் எழிலுற அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் திருவுருவம் தாங்கிய சப்பரம் பல்லக்கு சேவையாக எடுத்துச் செல்லப்பட்டது. பஜனா மண்டலி பக்தர்கள் அந்த தெய்வீகச் சப்பரத்தைத் தங்கள் தோள்களில் சுமந்து செல்ல, பகவானின் திருநாமத்தைப் போற்றும் நாம சங்கீர்த்தனங்கள் விண்ணதிர பாராயணம் செய்யப்பட்டன. நல்லுார் பகுதி முழுவதும் சாயி நாதனின் நாமம் எதிரொலிக்க, அந்த இடமே பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தது. பகவான் பாபா போதித்த மானவ சேவையே மாதவ சேவை என்பதற்கிணங்க, நல்லுார் பகுதியில் 108 நபர்களுக்கு அன்புடன் கூடிய ஸ்ரீநாராயண சேவை இனிதே நிறைவேற்றப்பட்டது. இந்த ஆராதனை விழாவில் நல்லுார் பகவான் சத்ய சாய்பாபா பஜனா மண்டலி நிர்வாகிகள் மற்றும் திரளானபக்தர்கள் கலந்துகொண்டு, உள்ளம் உருகும் சாயி பஜனைப் பாடல்களைப் பாடி பகவானை வழிபட்டனர்.