உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2 ஆண்டாக பூட்டிக்கிடக்கும் ‘கோசாலை’ திருத்தணி கோவில் நிர்வாகம் அலட்சியம்

2 ஆண்டாக பூட்டிக்கிடக்கும் ‘கோசாலை’ திருத்தணி கோவில் நிர்வாகம் அலட்சியம்

திருவாலங்காடு; திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், மாடுகளை பாதுகாக்கும் மையமான ‘கோசாலை’ கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடப்பதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில், மாடுகளை பாதுகாக்கும் மையமான ‘கோசாலை’ அமைக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பசுக்களை பராமரிக்கும் அளவுக்கு அங்கு இடவசதி இல்லாததால், பல்வேறு காரணங்களை கூறி, கோவில் நிர்வாகம் பசுக்களை வாங்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. மழைக்காலத்தில், கோசாலை அமைந்துள்ள இடத்தில் மழை நீர் தேங்கி சகதியாக மாறிவிடுகிறது. அதுமட்டுமின்றி, மாட்டுச்சாணத்துடன் சேர்ந்து, கோவில் வளாகம் முழுதும் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். எனவே, மாற்று இடத்தில் ‘கோசாலை’ அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தெற்கு மாட வீதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில், ‘கோசாலை’ அமைக்க முடிவானது.

அதன்பின், மூன்று ஆண்டுகளுக்கு முன், 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ‘கோசாலை’ அமைக்கும் பணி துவங்கியது. கட்டுமான பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், ‘கோசாலை’யை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், கோவில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர். அதனால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, கட்டி முடிக்கப்பட்டுள்ள ‘கோசாலை’யை, விரைவில் பயன்பாட்டற்கு கொண்டு வர, திருத்தணி கோவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !