பாலக்காடு பிரசன்ன மஹா கணபதி கோவில் கும்பாபிஷேக தின உற்சவம்
பாலக்காடு; பாலக்காடு அருகே, சாத்தபுரம், பிரசன்ன மஹா கணபதி கோவில் கும்பாபிஷேக தின உற்சவம் கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தி அருகில் உள்ள, சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவிலில், வைகாசி மாதம் கும்பாபிஷேக தின உற்சவம் நடப்பது வழக்கம், நடப்பாண்டு உற்சவ நிகழ்ச்சிகள் நேற்று துவங்கியது. கும்பாபிஷேக தின நாளான, நேற்று காலை, 5:00 மணிக்கு அஷ்டபதி, 5:30க்கு மஹா கணபதி ஹோமம், 6:30 மணிக்கு அபிஷேகம், நித்திய பூஜை நடந்தது. 8:00க்கு மூலவருக்கு பூர்ணாபிஷேகம் நடைபெற்றது.
காலை, 9:30 மணிக்கு ஒற்றைப்பாலம் ஹரியின் தலைமையில், 50 கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்சவாத்தியம் முழங்க, ஆடை ஆபரணங்கள் அணிந்த திருவம்பாடி சந்திரசேகரன் என்ற யானை மீது உற்சவர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பின், 11:30க்கு கும்பாபிஷேகம், 12:15 மணிக்கு புஷ்பாபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. மதியம், 12:30க்கு கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. மாலை, 5:00 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க, யானை அணி வகுப்புடன் காழ்ச்ச சீவேலி நடைபெற்றது. நாதஸ்வரம் இசை முழங்க, பல்லக்கில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வோடு உற்சவம் நிறைவடைந்தது.