காரைக்கால் மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
காரைக்கால்; காரைக்கால் சேத்தூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் திருநள்ளாறு அகர சேத்தூரில் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீமகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று தீமிதி திருவிழா நடந்தது.முன்னதாக தீமிதி திருவிழாவை முன்னிட்டு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலா நடந்தது. பின்னர் கரகத்தை பின் தொடர்ந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தீக்குழியில் இறங்கி மகா மாரியம்மனை வழிபட்டனர். சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர்.இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.