இடிந்து புதர் மண்டி உள்ள அகோபாலேஸ்வர பெருமாள் கோயில் முன் மண்டபம்
ஆயக்குடி: பழநி பழைய ஆயக்குடியில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள அகோபாலேஸ்வர பெருமாள் கோயில் முன்மண்டபம் இடிந்து, கோயிலுக்குள் புதர்மண்டி உள்ளது. இதனை சரி செய்ய பக்தர்கள் கோரிக்கை எழுந்துள்ளது.
பழநி அருகே பல பழைய ஆயக்குடி பகுதியில் ஹிந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள அகோபாலேஸ்வர பெருமாள் கோயில் பராமரிப்பு இன்றி புதர் மண்டி உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோயில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் வசம் இருந்து ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின் கோயில் பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் கோயில் உட்பகுதியில் செடிகள் முளைத்து புதர் மண்டி உள்ளது. இக்கோயிலுக்கு பிரதிவாரம் சனி தோறும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன் கோயிலின் முன் மண்டபம் மழையால் சேதமடைந்து அதனை சரி செய்யாமல், செடிகள் முளைத்து ஆபத்தான நிலையில் மண்டபம் உள்ளது. கோயில் வளாகத்தில் அம்பாள் சன்னதிக்கு முன்னால் உள்ள முன் மண்டபம் கூரை பெயர்ந்து விழுந்து உள்ளது. அங்கு பக்தர்கள், கூரை பெயர்ந்து விடும் அச்சத்துடனே அங்கு நின்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதுகுறித்து ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோயிலின் பழமை மாறாமல் புனரமைத்து விழாக்கள் தொடர்ந்து நடைபெறவும், இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு சித்திரைத் திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால் தற்போது அதற்கான சுவடே தெரியாமல் உள்ளது. எனவே மீண்டும் கோவிலில் திருவிழா வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அக்கறை செலுத்த கோரிக்கை எழுந்துள்ளது.