பாத்திமா நாச்சியார் கோயிலில் மொகரம் பண்டிகை பூக்குழி திருவிழா
எஸ்.புதூர்: எஸ்.புதூர் அருகே மொகரம் பண்டிகையை முன்னிட்டு பாத்திமா நாச்சியார் கோயிலில் பூக்குழி இறங்கும் திருவிழா நடந்தது.
தமிழகத்தில் சில இடங்களில் மொகரம் பண்டிகைக்காக ஹிந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூரில் ஜமீன்தார் காலத்தில் இத்திருவிழா உருவானது. பத்து நாட்கள் நடத்தப்படும் இத்திருவிழாவின் கடைசி நாளான ஜூன் 27ஆம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. ஆண்களும், பெண்களும் நேர்த்திக்கடனுக்கு தீ மிதித்தனர். இதைத் தொடர்ந்து பெண்கள் பூக்குழி முன்பாக தலையில் முக்காடு அணிந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் மேல் மூன்று முறை நெருப்பை அள்ளிப்போடும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து 30 அடி உயரத்திற்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அசனா, உசனாவுடன் பாத்திமா நாச்சியார் தேர் பவனி வந்தார். விழாவில் ஏராளமான ஹிந்துக்களும், முஸ்லிம்களும் பங்கேற்றனர்.