அதர்மத்தை அழித்து ஹிந்து தர்மத்தை நிலைநாட்டுவதே சாரதா பீடத்தின் பணி
சென்னை: ‘‘அதர்மத்தை அழித்து ஹிந்து தர்மத்தை நிலைநாட்டுவதே சாரதா பீடத்தின் பணி,’’ என, ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீவள்ளி ஆனந்த் பேசினார்.
தக் ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் சார்பில், ‘வந்தே குருபரம்பராம்’ நிகழ்ச்சியின் மூன்றாம் நிகழ்வு, நேற்று, ஆழ்வார்பேட்டை, நாரதகான சபாவில் நடந்தது.
இதில், அம்ரிதா முரளி யின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. உடன், ஆர்.கே.ஸ்ரீராம்குமார் வயலின், ஏ.அருண்பிரகாஷ் மிருதங்கம் வாசித்தனர்.
நிகழ்ச்சியின் இடையில், ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீவள்ளி ஆனந்த், அத்வைத வித்யா பரம்பரையின் சாதனைகளை விவரித்தார்.
அவர் பேசியதாவது:
நாட்டில் அதர்மம் பெருகிய காலத்தில், தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணுவின் அவதாரமாக ராமன், கிருஷ்ணன் அவதரித்தது போல், சிவபெருமானின் அவதாரமாக வந்தவர் ஆதிசங்கரர். அவர், தென்தேசத்தில் ‘தக் ஷிணாம்னாய சிருங்கேரி சாரதா பீடத்தை’ அமைத்தார்.
கடந்த 12ம் நுாற்றாண்டில், தீய வழிகளால் நாட்டைக் கைப்பற்றிய டில்லி சுல்தான்கள், ஹிந்துக்களை கொடுமைப்படுத்தினர்.
அக்காலகட்டத்தில், சிருங்கேரியின் 12-வது பீடாதிபதியாக இருந்த, வித்யாரண்ய மகாசுவாமிகள் விஜயநகர பேரரசை நிறுவி, அரசர்களுக்கு ஹிந்து தர்மத்தை போதித்து, நம் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் மீட்டார்.
பீடத்தின், 33-வது பீடாதிபதியான சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி சுவாமிகள், ஆதிசங்கரர் பிறந்த காலடியைக் கண்டறிந்து கோவில் கட்டினார்; பனாரஸ் ஹிந்து பல்கலை உள்ளிட்ட கல்விக்கூடங்கள், வேத பாடசாலைகளை நாடு முழுதும் உருவாக்கினார்.
அவர்களது வழியில் வந்த தற்போதைய பீடாதிபதி பாரதி தீர்த்த சுவாமிகளும் இளம்பீடாதிபதிகளும் வேதாந்த தத்துவங்களைப் போதித்து, தர்ம சிந்தனையை வளர்க்கும் ஆன்மிக பணியைத் தொடர்ந்து செய்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.