உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோவில் மங்களப்பொருட்கள் ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்க பயணம்

ஸ்ரீரங்கம் கோவில் மங்களப்பொருட்கள் ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்க பயணம்

திருச்சி: ஸ்ரீவில்லிபுத்துாரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால், அவருக்கு பூமாலையுடன் பாமாலை சூட்டியதோடு அவரிடமே மணமாலையும் சூடிக் கொண்டார். இதனால், ஆண்டாளுக்கு சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற சிறப்புப்பெயரும் ஏற்பட்டது. ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் என்பதால், ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்த உறவும் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்துவந்தது. பல்வேறு காரணங்களினால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது.

எனினும், இருவூர் பக்தர்களின் முயற்சியால் இப்போது அவ்வழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரைத் தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிப்புத்துாரிலிருந்தும், ஸ்ரீவில்லிப்புத்துார் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்திலிருந்தும் பரஸ்பரம் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது.

நாளை, ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நடக்கவுள்ளதை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், பழங்கள், சந்தனம், தாம்பூலம் உட்பட மங்களப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. மங்களப்பொருட்கள் இன்று அதிகாலை ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு, மதியம் ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் கோவிலில், ரங்கநாதர் கோவில் நிர்வாகத்தினர், நிகழ்ச்சி நன்கொடையாளர்கள், அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் வாயிலாக சமர்ப்பிக்கப்படும் என கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !