இயற்கை சீற்றம் ஏற்படலாம் கோடி மடாதிபதி ஆரூடம்
ஹாசன்: " நேபாளம் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களின், இயற்கை சீற்றம் ஏற்பட்டதை போல, தென் மாநிலங்களிலும் ஏற்படலாம். மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்," என, கோடி மடத்தின் சிவயோகி ராஜேந்திர சுவாமிகள் அறிவுறுத்தினர்.
இது குறித்து, ஹாசனில் அவர் நேற்று அளித்த பேட்டி:
இந்தியாவின் வட மாநிலங்கள் மற்றும் நேபாள நாட்டில், இது வரை கண்டறியாத சம்பவங்கள் நடந்தன.
இன்னமும் அந்த நாடு, வெள்ள பாதிப்பால் அவதிப்படுகின்றன. இதே போன்ற சூழ்நிலை, தென்னக மாநிலங்களில் ஏற்படலாம்.
ஊரே வெள்ளத்தில் அடித்து செல்லும் சூழ்நிலை ஏற்படக்கூடும். எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மனிதனின் அளவுக்கு அதிகமான தலையீட்டால், இயற்கை சீற்றமடைகிறது. ஆயிரக்கணக்கான அடி ஆழத்தில், போர்வெல் தோண்டி, பூமியின் இயல்புத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர். இது, தண்ணீர் பாய்வதில், பிரச்னையை ஏற்படுத்துகிறது.
எதிர் காலத்தில் நடக்க கூடிய அசம்பாவிதங்களை, தடுக்க வேண்டுமானால் இறைவனை பிரார்த்தியுங்கள். இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க, முன்னெச்சரிக்கை மற்றும் இறைவனிடம் பிரார்த்தனை என, இரண்டுமே அவசியம்.
கர்நாடகாவில் தென் மேற்கு பருவ மழை, வழக்கத்தை விட குறைந்துள்ளது என்றாலும், வட கிழக்கு மழை, நல்ல முறையில் பெய்யும் அறிகுறிகள் தென்படுகின்றன; ஏரிகள், குளங்கள் நிரம்பும். வட கிழக்கு பருவ மழையால், 90 சதவீதம் மக்களுக்கு பலன் கிடைக்கும்.
சிவகுமார் முதல்வராவார் என, நான் ஏற்கனவே கூறியிருந்தேன். முதல்வரான பின், அவரிடம் பல மாற்றங்கள் தென்படுகின்றன. ஏழைகளை கவனிக்கும், எளிமையாக நடந்து கொள்ளும் குணம், அவரிடம் உள்ளது.
எனவே அவரை மக்கள் ஆதரித்து, ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.